கங்கை அமரனை நான் ஆதரிக்கவில்லை: பளிச்சுன்னு சொன்ன யுவன் ஷங்கர் ராஜா
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கங்கை அமரனை ஆதரிக்கவில்லை என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தனது அனுமதி இல்லாமல் மேடையில் தனது பாடல்களை பாடக் கூடாது என்று இசைஞானி இளையராஜா எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து இளையராஜாவின் பாடல்களை இனி பாடப் போவது இல்லை என எஸ்.பி.பி. அறிவித்துள்ளார்.
எஸ்.பி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜாவை அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி. பாஸ்கரின் மகளும், பிரபல ஆடை வடிவமைப்பாளருமான வாசுகி பாஸ்கர் ஆர்.கே. நகரில் கங்கை அமரனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் போட்டு அதில் யுவனின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.
I don't support this. https://t.co/ij3An7pBNp
வாசுகியின் ட்வீட்டை பார்த்த யுவன் இதை நான் ஆதரிக்கவில்லை என்று ட்வீட்டினார். இதையடுத்து வாசுகி அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.