லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது
பிரித்தானியாவில் பாராளுமன்ற தாக்குதலை நடத்தியது தங்களது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி என ஐ.எஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்பட 5 பேர் பலியாகினர்.
மேலும், தாக்குதல் நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளான்.
இத்தாக்குதலுக்கு பிறகு இன்று பாராளுமன்றம் கூடியபோது, ‘தாக்குதலை நடத்தியது பிரித்தானிய குடிமகன் என்றும், ஏற்கனவே பொலிசாருக்கு தெரிந்த நபர்’ என பிரித்தானிய பிரதமர் தெரசா மே கூறியுள்ளார்.
இந்நிலையில், சற்று முன்னர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில் ‘லண்டன் நகரில் தாக்குதலை நடத்தியது எங்களது அமைப்பை சேர்ந்த வீரர்’ என புகழாரம் சூட்டியுள்ளனர்.