இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம

தினகரன்  தினகரன்

இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.

மூலக்கதை