ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவதற்கான பிரெக்ஸிட் மசோதா நிறவேற்றம்: 29ம் தேதி அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்

லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில், கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை அடுத்த வாரம் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இந்த மசோதா அந்நாட்டு சட்டமாகியுள்ளது. இதனால், விரைவில் ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் பிரிய இருக்கிறது.இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள அந்நாட்டு பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர், மார்ச் மாத இறுதியில் யூனியனைவிட்டு வெளியேறும் நடவடிக்கை தொடங்கும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்திருந்தார். எங்களது நாடாளுமன்றத்தில் உரிய தீர்மானம் நிறைவேறிவிட்டதால் மார்ச் 29-ம் தேதி பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், ஐரோப்பிய யூனியன் சார்பில் அதற்கான பூர்வாங்க நடைமுறைகளைத் தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று, வெளியேற்ற நடவடிக்கைகள் 2 ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் முறையான அறிவிப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தனது பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை அறிவிக்கையை அடுத்த 2 நாட்களில் வெளியிடும் என்று தெரிகிறது. 28 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனின் கூட்டுப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து விலகி, மீண்டும் தனி நாடாகச் செயல்பட பிரிட்டனில் பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

மூலக்கதை