பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் வருகை

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் வருகை

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா சிறைக்குச் சென்றதால், அவர் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் அனைத்தையும், அவரது அக்கா மகன் டி.டி.வி.தினகரனிடம் ஒப்படைத்துச் சென்றார். இதற்காக, அவரை கட்சியில் உடனடியாக இணைத்தவர், அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலராகவும் நியமித்தார்.

கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருந்து, தினகரன், சசிகலாவின் விருப்பப்படி, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி, நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற வைத்தார

இதற்கிடையில், பெங்களூரு சென்று, சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய தினகரன், இன்று (பிப்.,23) காலை, அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.

பகல் 12:00 மணிக்கு நடக்கும் இந்த பதவி ஏற்பு விழாவில், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று, கட்சியின் மாநில நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவருக்கும் முன் கூட்டியே தகவல் சொல்லப்பட்டது.

இது குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கட்சியின் பொதுச் செயலராக தேர்வு பெறுகிறவர் மட்டும்தான், இப்படியெல்லாம் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தி, பதவியை பெறுவது வாடிக்கை. கட்சியின் மற்ற எந்தப் பொறுப்புக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. வெறும் அறிவிப்பு மட்டும்தான் இருக்கும்.

ஆனால், தினகரனுக்கு மட்டும், புதிதாக இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலர் சிறையில் இருக்கும் நிலையில், அவர் பொறுப்பை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் தினகரனுக்கு, கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படியொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினகரனின் அதிர்ஷ்ட எண் 5. அதனால, ஐந்து கூட்டு எண்ணிக்கை வரும் நாளான 23ல் அவர் பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு இப்பதவி அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும், சசிகலா, சிறையில் இருந்து விடுபட, நான்கு ஆண்டுகள் ஆகும் என்பதால், நான்கு ஆண்டுகள் வரையில், தினகரனுக்கு சிக்கல் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை