‘பகடி’யைத் தடுப்பதற்கு ஜனாதிபதி அறிவுரை

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
‘பகடி’யைத் தடுப்பதற்கு ஜனாதிபதி அறிவுரை

பல்கலைக்கழகங்களில் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பகடி வதையைத் தடுப்பதற்கு விசேட கவனத்தைச் செலுத்தி, மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார். 

பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து கலந்துரையாடி வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். 

பொலிஸ்மா அதிபருக்கே, ஜனாதிபதி இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஆசிய-பசுபிக் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான 22ஆவது மாநாட்டில் பங்கேற்றுள்ளார். 

இந்நிலையில், அலைபேசியில் தொடர்பு கொண்டே, ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுரை வழங்கியுள்ளார். இந்த மாநாடு நாளை 24ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.  

பல்கலைக்கழக பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் அரசாங்கத்துக்கு பொறுப்பு இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அந்தப் பொறுப்பை எவ்விதமான தயக்கங்களும் இன்றி நிறைவேற்றவேண்டும் என்றும் கூறியுள்ளதாக, ஜனாதிபதி செயலக தகவல் தெரிவிக்கின்றது.  

பல்கலைக்கழகங்களுக்கு மிலேச்சத்தனமாக அல்லது காட்டுச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, நேற்று (22) நடைபெற்ற மத்துகம, ஆனந்த தேசிய கல்லூரியின் 75ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  

“ஒழுக்கப் பண்புகளுடன்கூடிய அநேக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும்வகையில், ஒரு சிறுபிரிவினரால் அசாதாரணமான முறையில் செயற்படுத்தப்படும் பகடிவதையைத் தடுப்பதற்கு, பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்” என்றார்.  

மூலக்கதை