சிம்பு இசையில் பாடும் டி.ராஜேந்தர், குறள்அரசன்

தினமலர்  தினமலர்
சிம்பு இசையில் பாடும் டி.ராஜேந்தர், குறள்அரசன்

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த சந்தானத்தை மன்மதன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் சிம்பு. அந்த நன்றிக்கடனை மறக்காமல் சிம்பு கூப்பிட்டபோதெல்லாம் அவரது படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்படியும் நன்றிக்கடன் மிச்சமிருக்கிறது என்று நினைத்தாரோ என்னவோ, சேதுராமன் இயக்கத்தில் தான் நடிக்கும் 'சக்கப்போடு போடு ராஜா' படத்தில் சிம்புவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார் சந்தானம்.

இப்படத்தில் இடம்பெறவிருக்கும் சந்தானத்தின் அறிமுகப் பாடலைப் பாடுவதற்கு முதலில் ஜி.வி.பிரகாஷ்குமாரை அணுகினாராம் சிம்பு.

ஜி.வி.யிடமிருந்து எவ்வித பதிலும் வராததினால் கடுப்பான சிம்பு அடுத்து அணுகியது இசையமைப்பாளர் அனிருத்தை. தன்னுடைய நெருங்கிய நண்பர் சிம்பு அழைத்ததும் மறுபேச்சுபேசாமல் 'கலக்கு மச்சான் கலக்குறே...' எனத் தொடங்கும் அப்பாடலை பாடிக்கொடுத்துள்ளார். இந்த பாடலுக்கான வரிகளை சிம்பு எழுதியுள்ளார். இப்பாடலுக்கான காட்சிகளைவெளிநாட்டில் படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.

'சக்கப்போடு போடு ராஜா' படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடலை சிம்புவின் அப்பாவான விஜய டி.ராஜேந்தர் பாடி இருக்கிறாராம். கிராமத்தில் நடைபெறும் திருவிழா கொண்டாட்டத்தில் இடம் பெறும் பாடலாம் இது. ‛‛அம்மாடி ஆத்தாடி...'' பாடலைப்போல் கேட்பவர்களை ஆட வைக்கும்படி இந்தப் பாடல் இருக்குமாம். இவ்விரு பாடல்கள் தவிர 'சக்கப்போடு போடு ராஜா'வில் ரொமான்டிக் பாடல் ஒன்றும் இடம்பெறவிருக்கிறது.

இந்தப் பாடல் மூலம் ஒரு புதுப் பாடகியையும், புதுபாடகரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. அந்த புதுபாடகர் வேறு யாருமல்ல.. சிம்புவின் தம்பி குறள்அரசன் தான்.

மூலக்கதை