நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகரிடம் போலீஸ் விசாரணை

தினகரன்  தினகரன்

கொச்சி: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் முன்னணி நடிகர் ஒருவரிடம் கேரள போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். பாவனா கடத்தப்பட்டு காரில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான விவகாரம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த முன்னணி நடிகர் யார் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்றபோதும் அது நடிகர் திலீப் என திருவனந்தபுரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திலீப் தவிர மேலும் ஒரு இளம் இயக்குனருக்கும் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுத்துவருகிறது. இதன் அடிப்படையில் காக்கநாட்டில் அவரும் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். இதனிடையே காவல்துறையினர் தன்னிடம் விசாரணை ஏதும் செய்யவில்லை என நடிகர் திலீப் மறுத்துள்ளார். கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேவையில்லாமல் தனது பெயர் இந்த விவகாரத்தில் நுழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பல்சர் சுனில் பிடிபட்டுவிட்டதாக கூறப்பட்டாலும் அந்த தகவலை காவல்துறையினர் மறுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கொச்சி திரும்பும்போது நடிகை பாவனா கடத்தப்பட்டார். காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பாவனா, 2 மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து தப்பி வந்துவிட்டார். மலயாள திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகிலும் பாவனா கடத்தல் விவகாரம பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை