தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரை ஆராய அலுவலர் குழு - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரை ஆராய அலுவலர் குழு  எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை- தமிழக அரசுப் பணியாளர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை ஆராய்ந்து முடிவெடுக்க அலுவலர் குழு ஒன்றை அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இதில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க ‘அலுவலர் குழு’ ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன்.



இக்குழுவில் நிதித்துறை, உள்துறை, பள்ளிக் கல்வித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் இடம் பெறுகின்றனர். இந்த குழு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் மீதான மத்திய அரசு முடிவுகளை ஆராய்ந்து,  அவற்றை தமிழ்நாடு  அரசு அலுவலர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும்.

மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே போன்று இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.

அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய ஊழியர் சங்கங்கள் இந்த குழுவிடம் தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கலாம். அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது வரும் ஜூன் 30ம் தேதிக்குள் அரசுக்கு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.


.

மூலக்கதை