குழந்தைகள் பலாத்காரம், ஒரு தேசிய அவமானம்: சினேகா கோபம்

தினமலர்  தினமலர்
குழந்தைகள் பலாத்காரம், ஒரு தேசிய அவமானம்: சினேகா கோபம்

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது, தமிழ் நாட்டில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுவது போன்ற சம்பங்கள் நடிகை சினேகா மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

என்னுடைய துறையில் பணியாற்றும் என் சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள், எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாய் இருப்பேன் என்பதனை உறுதிப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். எந்தவித பயமுமின்றி அவர்களுக்கு நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்.

இத்தகைய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், நம் சமூதாயத்தில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பாலியல் துஷ்பிரயோகம், பலாத்காரம் என நாட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் நடக்கும் கொடுமைகளை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்கள் அதனை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், எங்கே இந்த சமுதாயம் இத்தகைய செயல்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்களையே காரணம் காட்டி விடுமோ என்று பயந்து தான்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி 3 வயது, 7 வயது குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் தூக்கி வீசப்படுவதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டே இருக்க போகிறோம்? இந்த பச்சிளம் குழந்தைகளின் புகைப்படங்களை பார்க்கும்பொழுது, எனது நெஞ்சம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது. ஒரு தாயாக அந்த குழந்தைகளின் பெற்றோர்களின் வலி என்ன என்பதனை என்னால் உணர முடிகின்றது.

பெண்மையை போற்றிய நாட்டில், இப்போது ஏதோ சரி இல்லாமல் ஆகி விட்டது. பெண்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்ந்த காலங்கள் யாவும் அழிந்து விட்டது. இது நம் நாட்டிற்கு ஏற்பட்ட மிக பெரிய தேசிய அவமானம். தற்போது அந்த நிலைமையை மாற்ற வேண்டிய நேரமும், கடமையும் நமக்கு இருக்கின்றது. இத்தகைய மிருகத்தனமான செயல்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு தங்களின் மரியாதயை திரும்ப பெற்று தர நாம் குரல் கொடுக்க வேண்டும் .

இவை அனைத்துக்கும் மேலாக, இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை சட்டம் வழங்க வேண்டும், இந்த தண்டனை அவர்களின் மனதில் பயத்தை விதைக்க வேண்டும். நிர்பயா, நந்தினி, ரித்திகா, ஹாசினி போன்றவர்களுக்கு ஏற்பட்ட கோர சம்பவங்கள் இனியும் நடக்க கூடாது. எங்களுக்கு நீதி வேண்டும். எங்களுக்கு மரியாதை வேண்டும்.

இவ்வாறு சினேகா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை