ஒற்றை யானை தாக்கி விவசாயி பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒற்றை யானை தாக்கி விவசாயி பரிதாப பலி

பாலக்கோடு- தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான, பாலக்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அருகே இன்று காலை 7 மணியளவில் ஆண் யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. யானையை கண்டதும் பொதுமக்களும், சிறுவர்களும் ஓட்டம் பிடித்தனர்.

அங்கிருந்தவர்களை மிரட்டியபடி மாரண்டஹள்ளி-ராயக்கோட்டை சாலையில் சென்றது. பொதுமக்கள் பின்னால் சென்றபடி யானையை விரட்டினர்.

அப்போது ஆலமரத்துப்பட்டி என்ற கிராமத்துக்குள் நுழைந்த யானை, அங்குள்ள விவசாய நிலத்தில் தனியாக நின்று கொண்டிருந்த விவசாயி கிருஷ்ணன் (70) என்பவரை தும்பிக்கையால் சுழற்றி கீழே போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதை பார்த்து கொண்டிருந்த எம். செட்டிஅள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் பிரவீண் (13) என்பவரை யானை துரத்தியது.

அவர் ஓட்டம் பிடித்தபோது அங்கிருந்த குழியை கவனிக்காமல் அதில் தடுமாறி விழுந்தார். அங்கு வந்த மக்கள் யானையை விரட்டியடித்து மாணவரை மீட்டனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராயக்கோட்டையை ஒட்டிய வனத்துக்குள் யானை சென்றது.

யானைகள் அவ்வப் போது ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதும், தனியாக சிக்குவோரை அடித்து கொல்வதுமாக உள்ளது.

இதனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனத்தையொட்டிய கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

.

மூலக்கதை