தொலைநோக்குப் பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி
எச் – 1பி’ விசா விவகாரத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பார்லிமென்ட் எம்.பி.,க்கள் 26 பேர், அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்தித்தனர். சந்திப்புக்கு பின் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவுடன் உள்ள நல்லுறவு குறித்து இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் மேற்கொண்டு வரும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும், டிரம்புடனான தனது ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் குறித்தும் அமெரிக்க எம்.பி.,க்களிடம் பிரதமர் விளக்கிக் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் உள்ள ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும், ‘எச் – 1பி’ விசா விவகாரம் குறித்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். திறன்வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்தும் விவகாரத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.