சித்திரவதைக்கு உள்ளான நபரை கொலை செய்து விட்டால் வழக்கே இல்லாமல் தப்பித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
சித்திரவதைக்கு உள்ளான நபரை கொலை செய்து விட்டால் வழக்கே இல்லாமல் தப்பித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும்

சித்திரவதைக்கு உள்ளான நபர் உயிருடன் இல்லாவிட்டால் வழக்கை நடாத்த முடியாதென்றால் சித்திரவதைக்கு உள்ளான நபரை கொலை செய்து விட்டால் வழக்கே இல்லாமல் தப்பித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி இவ் வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கும், குறித்த எதிரி தரப்பு சட்டத்தரணிகளது ஆட்சேபனை விண்ணப்பத்தையும்  நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்துஉத்தரவிட்டார்.

சுன்னாகம் பொலிஸ் நிலைய சித்திரவதை வழக்கின் சாட்சி பதிவுகளானது நேற்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பமாகியது. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி நாகரட்ணம  நிஷாந்துடன் பிரதி மன்றாதிபதி குமார்ரட்ணம் முன்னிலையாகியிருந்தார். இதன்படி நேற்றைய வழக்கு விசாரனையின் போது மன்றில் எதிரிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் நிலையத்தில் முறையிடவோ அல்லது அவராலோ இவ் வழக்கு தொடுக்கப்படாதுடன் அவர் தற்போது இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற சாட்சி இருந்தாலேயே அவரை எதிரி தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரனை செய்கின்ற போதே குற்றச் சம்பவத்தின் உண்மை தன்மை மன்றுக்கு தெரியவரும். எனவே இவ் வழக்கில் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இல்லையென குறிப்பிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து இவ் வழக்கினை நெறிப்படுத்தும் அரச சட்டத்தரணியும் பிரதி மன்றாதிபதியுமான குமார் நாகரட்ணம்,  குறித்த சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த நபரது மரண விசாரனையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த நபரது உடலில் 20க்கு மேற்பட்ட காயங்கள் உள்ளதாகவும், அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவற்றை அடிப்படையாக கொண்டு இவ் வழக்கை நடாத்தமுடியும் எனவும் அவர் விண்ணப்பமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக, குறித்த சித்திரவதை என்பது போர்க்குற்றம் எனவும், அது மனித உரிமை மீறல் குற்றமெனவும் குறிப்பிட்ட நீதிபதி குறித்த சித்திரவதை வழக்கினை பாதிக்கப்பட்டவரது உறவினர் பாதுகாவலர் ஆகியோரது முறைப்பாடுகளின் அடிப்படையிலும் நடாத்தமுடியும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டியதுடன், சித்திரவதைக்கு உள்ளான நபர் உயிருடன் இல்லாவிட்டால் வழக்கை நடாத்த முடியாதென்றால் சித்திரவதைக்கு உள்ளான நபரை கொலை செய்துவிட்டால் வழக்கே இல்லாமல் தப்பித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி இவ் வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கும், குறித்த எதிரி தரப்பு சட்டத்தரணிகளது ஆட்சேபனை விண்ணப்பத்தையும் நிராகரித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கின் இரண்டாவது சாட்சியான துரைராசா லோகேஸ்வரன் என்பவரது சாட்சி பதிவானது இடம்பெற்றது. இவ் சாட்சியத்தில்,  தாம் கடந்த 2011.11.21ஆம் திகதி தமது புன்னாலைகட்டுவன் சித்தி விநாயகர  பாடசாலையில் கறகின்ற தாய் தந்தையை இழந்ட போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கியதாகவும், இதன்போது அங்கு வந்த ஊரேழு இராணுவ முகாமை சேர்ந்த பிரசாத் என்பவர் நீங்கள் மாவீரர் நிகழ்வா கொண்டாடுகிறீர்கள் என கேட்டதாகவும் தாம் அதற்கு இல்லையென பதிலழித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்பின்பு அன்றைய தினம் இரவு தனது வீட்டிற்கு வந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிந்திக்கபண்டார மயூரன் பிரசாந் ஆகியோர் தன்னை திருட்டு குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்து சென்றதாகவும் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். இதன்பின்பு 24.11.2011 அன்று சுமனன் என்பவரையும் சிந்திக்க மயூரன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்து காலை 9க்கும் 10க்கும் இடைப்பட நேரத்தில் கொண்டு வந்திருந்ததாகவும் இதன்போது சுமனது நெற்றிப் பகுதியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்ததாகவும் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தனிநாடு வேண்டுமா என கேட்டு கேட்டு தம்மை அடித்ததாகவும் தமக்கு மின்சார கம்பியினால் சுடுவைத்தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அரச தரப்பு விசாரனையில் உங்களையும் சுமனனையும் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களை அடையாளம் காட்ட முடியுமா என வினவியபோது குறித்த சாட்சி அவர்களை எதிரி கூண்டில் நின்றவாறு சுட்டு விரலால் அடையாளம் காட்டி அவர்களில் இருவரது பெயர்களையும் சரியாக குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்பு அவரது சாட்சியமானது எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறிககு விசாரனை செய்யப்பட்டது. இதன்போது அவரது மன்றில் வழங்கிய சாட்சியில் இரு விடயங்கள் பொலிஸ் தரப்பினது வாக்குமூலப் பதிவில் வேறுபட்டிருந்த நிலையில் அது மன்றால் அடையாளமிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவர் சாட்சிப் பதிவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இவ் வழக்கின் முதலாவது சாட்சியாகவுள்ள இராசதுரை சுறேஸ் என்பவரது சாட்சிப் பதிவானது இடம்பெற்றிருந்தது. இதில் அவர், தம்மை மாவீரர் தினம் கொண்டாடியதற்காக சுன்னாகம் பொலிஸார் கைது செய்ததாகவும் பின்னர் தம்மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தியதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு கைது செய்து தம்மையும் தம்முடன் சேர்த்து கொலை செய்யப்பட்ட சுமனன் என்பவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தாகவும் இதன்போது சுமனன் என்பவரை முட்டுக்காலில் போட்டு கால்களுக்குள் கைகளை விட்டு கட்டி இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள். இதன்போது அவர் தாம் மருத்து பாவிப்பவர் எனவும் தம்மை அடிக்க வேண்டாம் எனவும் கூறினார். ஆனால் அதனை கருத்திலெடுக்காத பொலிஸார் தொடர்ந்து அவரை போட்டு அடித்தார்கள். இவ்வாறு (அவர் கூறும்போது குறித்த கொலை செய்யப்பட்ட நபர் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எப்படி இருந்தார் என்பதை சாட்சி நீதிபதிக்கு தனது உடலால் செய்து காண்பித்திருந்தார்.)

இவ்வாறு அடிக்கும் போது சுமனன் இறந்து விட்டார். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் போட்டு அடித்தார்கள். எனக்கு ஆணிகளை காலில் இறுக்கி மின்சார கம்பியால் சுட்டார்கள். எனது ஆணுறுப்பை குறட்டால் நசித்தார்கள். பின்னர் இறந்த சுமனனது உடலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நின்ற புதிய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போனார்கள்.

இதன்போது உமக்கும் சுமனன் என்பவருக்கும் அடித்த சித்திரவதை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் யார் யார் என்பதை அடையாளம் காட்ட முடியுமா என பிரதி மன்றாதிபதி வினாவியபோது சாட்சி எதிரி கூண்டில் நின்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை முறையே அவர்கள் என்ன என்ன செய்தார்கள் என்று கூறியிருந்தார். அத்துடன் தற்போது இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் இல்லை எனவும் கூறியிருந்தார்.

இவறறை தொடர்ந்து இவரது சாட்சியங்களும் எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரனை செய்யப்பட்டது. இதன் பின்னர் நேற்றைய தினம் 6ஆம் மற்றும் 8ஆம் சாட்சிகளும் மன்றால் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இவ் வழக்கை நெறிப்படுத்தும் பிரதி மன்றாதிபதி குமார்ரட்ணம் இவ் வழக்கின் குற்றப் பத்திரிகையில் 30ஆம் 31ஆம் 32ஆம் சாட்சிகளாக மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை அணைப்பதற்கு மன்றின் அனுமதியை கோரியிருந்தார். அத்துடன் இவ் வழக்கின் சாட்சியில் இருந்து 2ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீக்குவதற்கான அனுமதியையும் கோரியிருந்தார்.

இவ்விரு விண்ணப்பங்களும் மன்றானது அனுமதியளித்துடன் இவ் வழக்கின் மீதி சாட்சிப்பதிவுகளை பதிவு செய்வதற்காக எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

மூலக்கதை