‘சந்திரிகாவின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டும்’

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
‘சந்திரிகாவின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டும்’

-லஹிரு பொத்முல்ல 

வடக்கிலுள்ள இராணுவத்தினர், அங்குள்ள பெண்களை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இன்னமும் உள்ளாக்கிவருவதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில், அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ், கேட்டுக் கொண்டுள்ளார். 

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்துக்குத் தலைமை தாங்கும் சந்திரிகா குமாரதுங்கவால் வெளிப்படுத்தப்பட்ட இந்தக் கருத்துகள், பாரதூரமானவை எனத் தெரிவித்த பீரிஸ், ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், இலங்கைப் படையினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுமெனவும் எச்சரித்தார்.   இந்தக் குற்றச்சாட்டுகளை அடிப்படையற்றன எனக் குறிப்பிட்ட பீரிஸ், இவற்றிலிருந்து தம்மைத் தாமே இராணுவத்தினர் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துவிட்டு, அமைதியாக இருக்கக்கூடாது என அரசாங்கத்திடம் தெரிவித்தார். 

“பாரதூரமான குற்றச்சாட்டுகள், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டபோது, அப்போதைய வெளிவிவகார அமைச்சரான நான், அரசாங்கத்தின் சார்பில் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தேன். ஆனால் இன்று, இக்குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது, ஆனால் அரசாங்கம், இவ்விடயத்தில் மௌனம் காக்கிறது” என அவர் தெரிவித்தார். 

நாட்டின் ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் இக்கருத்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தினூடாக, பாதுகாப்புப் படைகள் மீதான குற்றச்சாட்டை நியாயப்படுத்த, சர்வதேச சமூகத்தால் பயன்படுத்தப்படுமெனவும், பீரிஸ் தெரிவித்தார். 

கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, நாட்டின் படையினர், அரச அதிகாரிகள் ஆகியோரால், யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டை, இராணுவம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

மூலக்கதை