ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு அதிகாரிகளை விரட்டிய கிராம மக்கள்

தினமலர்  தினமலர்
ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு அதிகாரிகளை விரட்டிய கிராம மக்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் எடுக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஆய்வு செய்ய வந்த, வருவாய்த் துறை அதிகாரிகளை தடுத்து, கிராம மக்கள் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் உட்பட நாடு முழுவதும், 31 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க, கடந்த, 15-ல், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, திட்டம் தொடங்கப்பட்டால் நெடுவாசல், அதைச் சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, தங்களது வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும் எனக்கூறி, அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெடுவாசலில், ஒ.என்.ஜி.சி., நிறுவனத்தால் முன், கையகப்படுத்தப்பட்ட விளைநிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்ய சென்றனர்.

அப்போது, நெடுவாசல் பகுதி விவசாயிகள், 100-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டதோடு, விளைநிலங்களில் ஆய்வு செய்யவிடாமல் தடுத்து, அவர்களைத் திருப்பி அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு உடனே ஒப்புதலை திரும்பப் பெற வலியுறுத்தி, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

மூலக்கதை