புதிய பிரிவுகளில் கவனம்; நெஸ்லே நிறுவனம் முடிவு
புதுடில்லி : நெஸ்லே நிறுவனம், அடுத்தகட்டமாக, பிரீமியம் காபி, செல்ல பிராணிகள் பராமரிப்புக்கான பொருட்கள் ஆகியவற்றின் விற்பனையில் கவனம் செலுத்த உள்ளது.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட, விரைவாக விற்பனையாகும் நுகர்பொருட்கள் துறையில், நெஸ்லே ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின், மேகி நுாடுல்சுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். அதில், நிர்ணயித்த அளவை விட, அதிக வேதி பொருள் இருப்பதாகக் கூறி, மத்திய உணவு பாதுகாப்பு துறை, மேகி நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தது. பின், நீதிமன்ற உத்தரவால், மேகி மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், பிரீமியம் காபி, செல்ல பிராணிகள் பராமரிப்பு, சரும பாதுகாப்பு, தானியங்கள் உள்ளிட்ட பிரிவுகளிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து, நெஸ்லே இந்தியா நிர்வாக இயக்குனர் சுரேஷ் நாராயணன் கூறியதாவது: கடந்த ஆண்டில், எங்கள் நிறுவனத்தின் நிகர விற்பனை, 9,159 கோடி ரூபாய் என்றஅளவில் இருந்தது. இது, நடப்பாண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த ஆறு மாதங்களில், 35 பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.