விஜய் படம், ஜோதிகா விலகியது இதற்குத்தான்...!

தினமலர்  தினமலர்
விஜய் படம், ஜோதிகா விலகியது இதற்குத்தான்...!

அட்லீ இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆரம்பமானது. படத்தில் நாயகிகளாக ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே ஜோதிகா இந்தப் படத்திலிருந்து திடீரென விலகி விட்டார் என்ற தகவல் வெளியானது. அது பற்றி தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஜோதிகாவிற்குப் பதிலாக உடனடியாக நித்யா மேனனை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்கள்.

விஜய்யுடன் சில சூப்பர் ஹிட் படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த ஜோதிகா மீண்டும் விஜய்யுடன் நடிக்க சம்மதித்து திடீரென விலகியதற்கான காரணம் தெரியாமலே இருந்தது. இப்போது அதற்கான காரணம் என்ன என்பது தெரிந்துவிட்டது. பாலா இயக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கப் போகிறார் என்ற செய்தியை நேற்று அறிவித்துள்ளார்கள்.

பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததால்தான் ஜோதிகா, விஜய் படத்திலிருந்து விலகிவிட்டார் என்கிறார்கள். பாலா படத்தில் நடித்து முடிப்பதென்றால் எப்படியும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிடும். ஒருவேளை அதனால் கூட ஜோதிகா, விஜய் பட வாய்ப்பை மறுத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

'தாரை தப்பட்டை' படத்திற்குப் பிறகு பாலா 'குற்றப் பரம்பரை' படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். இப்போது படமும் மாறியிருக்கிறது, நட்சத்திரங்களும் மாறியிருக்கிறார்கள்.

மூலக்கதை