விதிகளை மீறிய சபாநாயகர்: சிக்கலில் அரசு!

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
விதிகளை மீறிய சபாநாயகர்: சிக்கலில் அரசு!

தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 122 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது.


    ஆனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக சட்டசபை கலவரமாக மாறியது.

சட்டசபை மைக், சேர்கள் உடைப்பு, சட்டை, புத்தகங்கள் கிழிப்பு என பெரும் அமளியானது. இதனால் எதிர்க்கட்சியான சட்டசபை காவலர்களால் கூண்டோடு வெளியேற்றப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.   எதிர்க்கட்சியான திமுக சட்டசபையில் விதிகள் மீறப்பட்டதாக ஆளுநரிடம் புகார் அளித்தது.

இதனையடுத்து ஆளுநரும் சட்டசபை செயலாளரிடம் அறிக்கை கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது.   இந்நிலையில் சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விதிகள் மீறப்பட்டதாக சில தகவல்கள் வருகின்றன. அவை, சட்டசபை விதிகளின்படி, சபை காவலர்களாக, சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்.

ஆனால், கடந்த சனிக்கிழமை துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் வந்திருந்தனர்.   சட்டசபைக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால், கூடுதலாக, 100 அல்லது 200 காவலர்கள் தேவை என சபாநாயகர் கடிதம் அனுப்புவார். அதன்படி காவல் ஆணையர், காவலர்களை அனுப்புவார்.

ஆனால் இந்த முறை போலீஸ் அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் தான் வேண்டும் என கடிதம் எழுதப்பப்பட்டது விதிமீறல் ஆகும்.   சபை காவலர்கள், சட்டசபை நடக்கும் அரங்கிற்கு வெளியேதான் நிற்க வேண்டும். சபாநாயகர் அழைத்தால் மட்டுமே அவர்கள் உள்ளே வர வேண்டும்.

ஆனால் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது, அமளியில் ஈடுபட்ட திமுகவினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். சபை காவலர்களால், அவர்களை வெளியேற்ற முடியவில்லை.   இதனால் சபையை ஒத்திவைத்துவிட்டு சபாநாயகர் வெளியேறினார்.

அதன்பின், கூடுதல் காவலர்கள் உள்ளே நுழைந்து, சபாநாயகர் சபையில் இல்லாத நேரத்தில் திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றினர். சபாநாயகர் இல்லாத நேரத்தில் காவலர்கள் உள்ளே நுழைந்தது விதிமீறல்.   அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டபோது சபாநாயகர் ஒட்டுமொத்தமாக, அனைவரையும் வெளியேற்றுங்கள் என கூறியது விதிமீறல்.

தவறு செய்த உறுப்பினர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டே, வெளியேற்றும்படி உத்தரவிட வேண்டும்.   இப்படி பல விதிமீறல்கள் சனிக்கிழமை நடந்த சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்துள்ளது.

இதனை வைத்து நீதிமன்றத்துக்கு செல்லும் போது இது அரசுக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

.

மூலக்கதை