தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக்கிய இலங்கை ராணுவம்: அதிர வைக்கும் கொடூரம் ஆதரங்களுடன் அம்பலம்

தினகரன்  தினகரன்

கேப்டவுன்: தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய இலங்கை ராணுவத்தினரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு இந்த அதிர்ச்சி தகவல்களை புகைப்பட ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது. வவுனியா, குத்தலம் உள்ளிட்ட இடங்களில் பெண்களை கைது செய்து தடுத்து வைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவத்தினர் பற்றிய விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ராணுவ உயரதிகாரிகளும் சிக்கியுள்ளனர். முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே ஆட்சி காலத்தில் 48 பெண்களும், தற்போதிய சிறிசேன ஆட்சியில் 7 பெண்களும் கொடூர பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவம் திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது என்பதை ஏற்கமுடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஒரு சிலர் அப்படியான குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என அந்த அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த கொடுமை, இன படுகொலையை விட மோசமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச சமூகம் விரைந்து தண்டிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலக்கதை