‛மொபைலை ஆன் பண்ண முடியல..': சி.ஆர்.சரஸ்வதி
சென்னை: சசிகலாவிற்கு ஆதரவு தந்ததற்காக மொபைல் போனில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அ.தி.மு.க., செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நான் பேட்டி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாகவும், மிரட்டும் விதமாகவும் மொபைலில் பேசி வருகிறார்கள். இதனால் எனது மொபைலை அணைத்து விடுவேன். இரவு 10 மணிக்கு மேலும் கொலை மிரட்டல் வருகிறது. தினமும் குறைந்தது 40க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வருகிறது.
என்னைப்போல முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, மற்றும் நடிகை விஜயசாந்தி ஆகியோருக்கும் மிரட்டல் வருகிறது. போலீசார் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து 2வது முறையாக நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.