‘அடிப்படை கட்டமைப்பு திட்டங்களால் நாட்டின் உருக்கு உற்பத்தி அதிகரிக்கும்’
மும்பை : தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: மத்திய அரசு, 2017 – 18ம் நிதியாண்டு பட்ஜெட்டில், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, வரும் நிதியாண்டில், உருக்கு தேவை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில், இந்தியா, உருக்கு உற்பத்தியில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி விட்டு, 8.89 கோடி டன்னுடன், உலகளவில், மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. அடுத்து, 2015 – 16ல், 8.97 கோடி டன் உருக்கு உற்பத்தியானது. நடப்பு நிதியாண்டில், ஏப்., – டிச., வரை, இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 8.8 சதவீதம் அதிகரித்து, 7.23 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதற்கு, முன்னணி நிறுவனங்கள் மேற்கொண்ட, அதிகப்படியான உருக்கு உற்பத்தி துணை புரிந்துள்ளது. வரும் நிதியாண்டில், உருக்கு உற்பத்தி, தேவை, பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.