அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது: நடிகர் கமல்ஹாசன்

PARIS TAMIL  PARIS TAMIL
அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது: நடிகர் கமல்ஹாசன்

அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:-
அரசியல்வாதிகள் மீது விருப்பமும் வெறுப்பும் ஒருசேர மக்களிடையே உருவாகியுள்ளது வீதியில் நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இது அச்சம் தருகிறது. இரண்டு கட்சிகளுமே மக்களைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், உண்மையில் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களா? மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளேன் என்று சொன்னவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்தவுடன் ஆளே மாறிவிடுகிறார்கள்.
இதுசார்ந்த கோபம் சில காலமாகவே மக்களிடம் உயர்ந்து வருகிறது. நான் (கமல்) அரசியலற்றவன். எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஊழலுக்கு எதிரான கசப்புணர்வை எப்போதும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன். மக்கள் தங்கள் கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. எம்எல்ஏக்கள் மூலமாகப் பேச வேண்டியுள்ளது.
சட்டப்பேரவையை சுத்தம் செய்ய வேண்டும். பரிசோதிக்கக் கூடாது. எனவே மறுதேர்தல் நடத்த வேண்டும். அப்போதுதான் மனதில் உள்ளதை வெளிப்படையாக மக்கள் உணர்த்துவார்கள். மறுதேர்தல் மக்களுக்குச் செலவு வைக்கக் கூடியது. ஆனால் தரையில் பாலைக் கொட்டிவிட்டோம். அதைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்தியாவுக்கு இப்போதிருக்கும் அரசியல் தேவை இல்லை. நான் (கமல்) மிகவும் கோபக்காரன். அதே போலத்தான் மக்களும் இருக்கிறார்கள். நாட்டுக்கு கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம். நல்ல சமநிலை உடைய மனிதர்கள்தான் அரசியலுக்குத் தேவை. அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது. நல்ல அரசியல்வாதிகளைத் தேடிப் பாருங்கள். அத்தகைய மனிதர்களை எல்லா நேரமும் காண முடியாது. சில சமயம் வீதியில்கூட கண்டுபிடிக்க முடியும்.
மெரீனாவில் நடந்தது போன்று இன்னுமொரு திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை நிகழ்ந்தால், நிச்சயம் மக்கள் கொந்தளித்து விடுவார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றார்.

மூலக்கதை