வினய் கத்தியார் இப்படிப் பேசலாம்.. நாட்டின் பிரதமர் பேசலாமா??
பதேபூர், உ.பி.: ரம்ஜானுக்கு தடையில்லாமல் மின்சாரம் தரப்படுமானால், அதே மின் வசதி தீபாவளிக்கும் தரப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதம், ஜாதியின் பெயரால் எந்த அரசும் பாரபட்சமாக நடக்க முடியாது என்றும் மோடி பேசியுள்ளார். மோடியின் இந்த.ப் பேச்சுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் உத்தரப் பிரதேசத்தில் பதேபூரில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசினார். அப்போது அவர் பேசியதிலிருந்து:
ரம்ஜான் சமயத்தில் தடையில்லாமல் மின்சாரம் தரப்படுமானால், அதே வசதி தீபாவளிக்கும் தரப்பட வேண்டும். அதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஒரு இடத்தில் கபரிஸ்தான் (இஸ்லாமியர்களின் இடுகாடு) இருக்குமானால், அங்கே ஷம்சானும் (இந்துக்களின் மயானம்) இருக்க வேண்டும் என்று கூறினார் மோடி.
மோடியின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வினய் கத்தியார் போன்ற தீவிர பாஜககாரர் போல மோடி பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் போல மோடி பேசவில்லை. மாறாக தீவிர பாஜக தலைவர் போல பேசியிருப்பது தவறு என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பிரதமர் கூற்றுப்படியே வைத்துக் கொண்டாலும் கூட ராமர் கோவிலைக் கட்டினால் கூடவே பாபர் மசூதியையும் கட்ட வேண்டும். இதை மோடி ஏற்றுக் கொள்வாரா என்றும் கேட்டு விவாதங்கள் கிளம்பியுள்ளன.
உ.பி சட்டசபைத் தேர்தலில் இதுவரை 3 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ளது.