ஹாஸ்டலுக்குள் முடங்கியுள்ள கூவத்தூர் எம்.எல்.ஏக்கள்.. ஊர் திரும்ப அச்சம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹாஸ்டலுக்குள் முடங்கியுள்ள கூவத்தூர் எம்.எல்.ஏக்கள்.. ஊர் திரும்ப அச்சம்!

மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்ட்ஸ்க்கு கொண்டு போய் அடைத்து வைத்தனர். பல வசதிகளைக் கொண்ட ஆடம்பர சிறையில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு அவர்கள் கேட்டதெல்லாம் கொடுத்து தாஜா செய்தது சசிகலா கும்பல்.சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றால் சசிகலாவிற்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக்குழு தலைவராக தேர்வுசெய்தனர் அதிமுக எம்எல்ஏக்கள்.

எம்எல்ஏக்களை காணவில்லை என்று நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் அளித்தனர். கூவத்தூர் விடுதியில் இருந்த மதுரை எம்எல்ஏ சரவணன் மாறுவேடத்தில் தப்பி வந்தார். கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண் குமார் ஓட்டுப்போடாமல் தொகுதிக்கு திரும்பினார்.

124 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கடிதம் அளிக்கவே, முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 

 

சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ரிசார்ட்டில் இருந்து எம்எல்ஏக்கள் நேரடியாக அழைத்து வரப்பட்டனர். 122 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

 

 

நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் 11 நாட்களுக்குப் பிறகு விடுதிக்கு திரும்பினர். அமைச்சர்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்பினர். இத்தனை நாட்கள் சொகுசு விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு இனிதான் பிரச்சினையே உள்ளது.

 

 

தொண்டர்களின் மனநிலை சசிகலாவிற்கு எதிராக உள்ளது. எனவே சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்த எம்எல்ஏக்கள் தொகுதிக்கு செல்வது எப்படி என்று யோசித்து வருகின்றனர். தொண்டர்கள், தொகுதி மக்களின் கோபத்திற்கு ஆளாகவேண்டுமே என்று அஞ்சி ஹாஸ்டலில் முடங்கியுள்ளனர்.

 

 

11 எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்து ஓபிஎஸ் பக்கம் வந்ததாக கூறினர். இதனால் அவர்களை அந்த தொகுதி மக்கள் பாராட்டினர். ஆனால் சசிகலா ஆதரவு நிலை எடுத்த எம்எல்ஏக்களோ எப்படி தொகுதி மக்களை சந்திப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் பல பகுதிகளில் எம்எல்ஏக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்த உடனேயே சிறிது நேரத்தில் அவிநாசியில் உள்ள சபாநாயகர் தனபாலின் அலுவலகம் தாக்கப்பட்டது. இதனையடுத்து பல தொகுதிகளிலும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாம்.

சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு உள்ளது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவு நிலை எடுத்த எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளதாம். அவர்களுக்கும் பாதுகாப்பு அளித்துள்ளது.

தொகுதி மக்கள் சமூக வலைத்தளங்களிலும், செல்போன் மூலமாகவும் கோரிக்கை வைத்ததை கேட்காமல் சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் நாளை முதல் தொகுதிக்கு சென்று எப்படி மக்களை சந்திப்பது என்று யோசித்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் தொகுதிக்கு செல்லவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்போடு சென்றாலும் மக்களின் வரவேற்பு எப்படி இருக்குமோ? இனிதான் வேடிக்கை ஆரம்பிக்க போகிறது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க எல்லோரும் காத்திருக்கிறோம்.

மூலக்கதை