இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி சுட்டுக்கொலை.. ஓசூர் அருகே பயங்கரம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி சுட்டுக்கொலை.. ஓசூர் அருகே பயங்கரம்

ஓசூர்: ஓசூர் அருகே விவசாயி ஒருவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் அருகே உள்ள சானமாவு கிராமத்தை சேர்ந்த சேஷாத்திரி என்பவருக்கு உப்பரதம்மன்றப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அங்கு கொட்டகை அமைத்து சில ஆடுகளை பராமரித்து வரும் அவர் இரவில் அங்கு தங்கி காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் அவர் காவல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் அவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் விவசாயி சேஷாத்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று காலை இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்த நிலையில் அவர் இறந்து கிடப்பதைக் கண்ட கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சேஷாத்திரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.. கடந்த ஓராண்டுக்கு முன்பும் சேஷாத்திரியை மர்ம நபர்கள் இதேபோன்று நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர். விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை