எரியூட்டப்பட்ட மகிழுந்துக்குள் இருந்து சடலம் மீட்பு! - காவல்துறையினர் விசாரணை!!
நேற்று சனிக்கிழமை காலை, எரியூட்டப்பட்ட மகிழுந்து ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பெற்றுக்கொண்ட மேலதிக தகவல்களின் படி, நேற்று சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு, Val-de-Marne இன் Joinville-le-Pont பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த சடலத்தை முதலில் பார்த்துள்ளார். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் முற்றாக எரிந்துள்ளது எனவும், விசாரணைகளை மகிழுந்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் எனவும், குறித்த மகிழுந்தின் உரிமையாளர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். மிக குறிப்பாக இது வாகன விபத்தின் மூலம் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
சிலவேளை, குறித்த நபர் மகிழுந்துக்குள் தூங்கியிருக்கலாம்.. அதன் போது மகிழுந்து தீப்பற்றியிருக்ககூடும் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான விசாரணைகளை Val-de-Marne காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.