சட்டசபை பரபரப்பு நிமிடங்கள்!
தமிழக அரசியல் வரலாற்றில் பதிவுபெற்ற முக்கிய நாளாக நேற்று (18 ம் தேதி) இருந்தது. சட்டமன்ற வளாகத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் வந்ததது முதல் அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. அவற்றின் தொகுப்பு இதோ:
● காலை, 9:57 மணி: சட்டசபை கூட்ட அரங்கிற்கு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வந்தார். அவருக்கு, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக, அவர் வெளியே புறப்பட்டு சென்றார்.
● 10:08: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வரத் துவங்கினர்.
● 10:12: பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் செம்மலை, பாண்டியராஜன் வந்தனர்.
● 10:16: துரைமுருகன் மீண்டும் வந்தார். இருக்கையில் அமர்ந்து, பிரணாயமம் என்ற மூச்சு பயிற்சியை மேற்கொண்டார்.
● 10:20: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் வந்தார்.
● 10:25: அமைச்சர்கள் வந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர், செம்மலையிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஏதோ கூற, செம்மலை மறுப்பு தெரிவித்தார்.
● 10:34: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் வரிசையாக வந்தனர்.
● 10:40: தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முதல்வர் அலுவலக செயலர்கள் வந்து தங்கள் இருக்கையில் அமர்ந்தனர்.
● 10:44: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வந்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து, வணக்கம் தெரிவித்தனர்.
● 10:50: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வந்தார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அவர் வந்ததை கவனிக்காதது போல இருந்தனர்; தி.மு.க.,வினர் வணக்கம் தெரிவித்தனர்.
● 10:51: பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி வந்து, தன் இருக்கையில் அமர்ந்தார். அப்போது, தி.மு.க.,வினர், 'வா சிங்கம் வா... தன்மான சிங்கமே வா' என்றனர்.
● 10:51: முதல்வர் இடைப்பாடி பழனிசாமி வந்தார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து வணக்கம் தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எழுந்திருக்கவில்லை.
● 11:00: சபாநாயகர் வந்தார். சட்டசபை துவங்கியது.
● பகல், 12:02 மணி: தி.மு.க.,வினர் ரகளை துவங்கியது.
● 12:11: சட்டசபை, பகல், 1:00 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக, சபாநாயகர் தனபால் அறிவித்துவிட்டு வெளியேறினார்.
● 12:15: அமைச்சர்கள் மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள், சபாநாயகர் அறைக்கு சென்றனர்.
● 1:00 : மீண்டும் சட்டசபை கூடியது.
● 1:13 : மீண்டும் ரகளை ஆரம்பமானது.
● 1:33 : தி.மு.க.,வினரை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்பின், மாலை, 3:00 மணி வரை சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
● 2:45 : சட்டசபை உள்ளே அமர்ந்திருந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
● மாலை, 3:00 மணி: சட்டசபை மீண்டும் கூடியது. ஓட்டெடுப்பு துவங்கியது.
● 3:22: ஓட்டெடுப்பில் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
● 3:30: சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. மீண்டும் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.