தமிழகத்தில் முதலீடு செய்ய ஜெர்மனி நிறுவனங்கள் ஆர்வம்
சென்னை : ஜெர்மனி துணை துாதர் அச்சிம் பேகிக், தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இது குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவைச் சேர்ந்த, ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜெர்மனியில் முதலீடு செய்துள்ளன. அது போல, ஜெர்மனி நிறுவனங்களும், இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில், வாகனத் துறையில், ஜெர்மனி நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. இந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்க, ஜெர்மனி நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை தொழில்நுட்பங்கள், கல்வி பரிவர்த்தனை திட்டங்கள் ஆகியவற்றில், முதலீடு செய்ய, ஜெர்மனி நிறுவனங்கள் விரும்புகின்றன என, அச்சிம் பேகிக் தெரிவித்தார். ஜெர்மனியின், ‘சகோதரி நகரம்’ திட்டத்தில், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இணைந்தது போல, தமிழகமும் இணைய, மாநில அரசுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என, கவர்னர் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.