சட்டசபைக்கு ஒன்றாக சென்ற ஓ.பன்னீர் செல்வம் அணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டசபைக்கு ஒன்றாக சென்ற ஓ.பன்னீர் செல்வம் அணி

சென்னை- ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இன்று காலையில் ஓபிஎஸ் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் அனைவரும் ஒன்றாக சட்டமன்றம் சென்றனர்.

அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ்க்கு ஆதரவாக 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் 12 எம்பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால், கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, பாண்டியராஜன், சண்முகநாதன், எம்எல்ஏக்கள் மனோ ரஞ்சிதம், சரவணன், சின்ராஜ், ஆறுகுட்டி, மாணிக்கம், மனோகர் ஆகியோர் வந்தனர். அவர்கள் காலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து பாண்டியராஜன் மட்டும் காலை 9. 30 மணிக்கு வெளியில் சென்றார். அவர், அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை சந்திக்கச் சென்றதாக கூறப்பட்டது.

அதன்பின் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 10 பேரும் ஒன்றாக சட்டமன்றம் புறப்பட்டுச் சென்றனர்.

ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ள மயிலாப்பூர் எம்எல்ஏவும், முன்னாள் டிஜிபியுமான நட்ராஜ் தனியாக சட்டமன்றம் புறப்பட்டுச் சென்றார்.

.

மூலக்கதை