எம்ஜிஆர் மறைந்த போது சட்டசபையில் நடந்த கலவரம் - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கலைக்கப்பட்டது ஜானகி அரசு

தமிழ் முரசு  தமிழ் முரசு
எம்ஜிஆர் மறைந்த போது சட்டசபையில் நடந்த கலவரம்  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கலைக்கப்பட்டது ஜானகி அரசு

சென்னை- தமிழகத்தில் எம்ஜிஆர் மறைந்த போதும் அதிமுக 2 ஆக உடைந்திருந்தது. அப்போது, முதல்வராக ஜானகி அம்மாள் பொறுப்பேற்றதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

அப்போது சட்டசபையில் பயங்கர கலவரம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டசபை வரலாற்றில் ஏற்கனவே 29 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போதும் ஜானகி அம்மாள் தலைமையிலான ‘அதிமுக அரசுதான்’ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. இப்போது ஜெயலலிதா மரணத்திற்கு பின் அதிமுக 2 ஆக உடைந்திருப்பது போல், அப்போது எம். ஜி. ஆர்.

மறைந்ததால் அதிமுக 2 ஆக உடைந்திருந்தது. அதிமுகவை தோற்றுவித்த எம். ஜி. ஆர், தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது,  1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மரணம் அடைந்தார்.

அவரது மறைவைத்  தொடர்ந்து, எம். ஜி. ஆரின் மனைவி ஜானகி அம்மாள்  தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியுமாக கட்சி உடைந்திருந்தது.

அப்போது அமைச்சராக இருந்த ஆர். எம். வீரப்பன் தலைமையிலான அணியினர், ஜானகி அம்மாளை முதல்வராக தேர்ந்தெடுத்தனர்.

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அவருக்கு கவர்னர் குரானா 3 வாரம் கால அவகாசம் கொடுத்தார். அதன்படி, 1988-ம் ஆண்டு ஜனவரி 28ம்  தேதி காலை 10 மணிக்கு சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெற்றது.

ஜானகி அணிக்கு ஆதரவாக அப்போதைய சபாநாயகர் பி. எச். பாண்டியன் இருந்தார். அந்த சட்டசபையில் அதிமுகவுக்கு  131 எம். எல். ஏ. க்கள் இருந்தனர்.

இதில், ஜானகி அணியில் 98  பேரும், ஜெயலலிதா அணியில் 28 பேருமாக பிரிந்திருந்தனர். காங்கிரசில் 64 பேரும்,  தி. மு. க. வில் 12 பேரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் 4 பேரும், ஜனதா  கட்சியில் 3 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் 2 பேரும்,  முஸ்லிம் லீக் கட்சியில் 2 பேரும், பார்வர்டு பிளாக் கட்சியில் 2 பேரும்,  குடியரசு கட்சியில் ஒருவரும், சுயேச்சையாக ஒரு எம்எல்ஏவும் இருந்தனர்.

12  இடங்கள் காலியாக இருந்தன. ஜெயலலிதாவின் அணியில் முன்னாள் அமைச்சர்கள்  நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசர்,  துரை ராமசாமி ஆகியோர் இருந்தனர்.

அன்று  காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும், சபாநாயகர் பி. எச். பாண்டியன் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

காங்கிரஸ் எம். எல். ஏ. க்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்துள்ளதாக கூறி, சபையை பகல் 12 மணிக்கு ஒத்தி வைத்தார். மீண்டும் 12 மணிக்கு சட்டசபை கூடியபோது, நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர்,  திருச்சி சவுந்தரராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், அரங்கநாயகம் ஆகிய 6 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக சபாநாயகர் பி. எச். பாண்டியன் அறிவித்தார்.

இதனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை மாலை 3 மணிக்கு கூடியபோதும் அமளி ஏற்பட்டது.

எம். எல். ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகள், சோடா பாட்டில்கள் பறந்தன.

போலீசார் உள்ளே புகுந்து தடியடி  நடத்தினர். இதனால், அவை தானாகவே கலைந்தது.



பின்னர், சிறிது நேரத்தில் மீண்டும் சபையை பி. எச். பாண்டியன் கூட்டினார். அப்போது, காங்கிரஸ், ஜெயலலிதா ஆதரவு எம். எல். ஏ. க்கள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, குடியரசு கட்சி எம். எல். ஏ. க்கள் வரவில்லை.

ஜானகி அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 99  உறுப்பினர்களும், எதிராக 8 தி. மு. க.

உறுப்பினர்களும் வாக்களித்தனர். 2 முஸ்லிம் லீக் உறுப்பினர்களும், ஒரு ஜனதா கட்சி உறுப்பினரும் நடுநிலை வகித்தனர்.

நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜானகி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவைக்கு வராத ஜெயலலிதா ஆதரவு எம். எல். ஏ. க்கள் 27 பேரை பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் பி. எச். பாண்டியன்  அறிவித்தார்.

அன்று சட்டசபையில் நடந்த கலவரத்தில் சபாநாயகர் உள்பட பல உறுப்பினர்கள் காயம் அடைந்தனர்.

அதன்பின், 2 நாட்களில் ஜானகி அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1989-ம்  ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது. ஜானகி அணியினர், ‘இரட்டை புறா’ சின்னத்திலும், ஜெயலலிதா அணியினர் ‘சேவல்’  சின்னத்திலும் போட்டியிட்டனர்.

தேர்தலில் தி. மு. க. 150 இடங்களில் வெற்றி  பெற்று ஆட்சி அமைத்தது.

ஜெயலலிதா அணி 27 இடங்களிலும், ஜானகி அணி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.   ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜானகி அம்மாள் தோல்வியடைந்தார். இதனால் அவர்  அரசியலைவிட்டு ஒதுங்கியதை தொடர்ந்து இரு அணிகளும் இணைந்தன.

அதிமுகவுக்கு மீண்டும் ‘இரட்டை  இலை’ சின்னம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை