நாட்டின் பால் உற்பத்தி 10.54 கோடி டன்னாக உயர்வு
புதுடில்லி : நடப்பாண்டில், நாட்டின் பால் உற்பத்தி, 10.54 கோடி டன்னை எட்டியுள்ளதாக, மத்திய வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது.
சர்வதேச அளவில், பால் உற்பத்தியில், இந்தியா முன்னணியில் உள்ளது. நாட்டில், உ.பி., – ராஜஸ்தான், ம.பி., – குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்கள், அதிகளவில் பால் உற்பத்தி செய்கின்றன. நடப்பு பருவத்தில், இதுவரை, நாட்டின் பால் உற்பத்தி, 10.54 கோடி டன்னை எட்டியுள்ளதாக, மத்திய வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பு பருவத்தில், 16.37 கோடி டன் பால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முந்தைய பருவத்தில், 15.55 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பு பருவத்தில், இதுவரை, பால் உற்பத்தி, 10.54 கோடி டன்னை எட்டியுள்ளது. கடந்த பருவத்தை விட, நடப்பு பருவத்தில், பால் உற்பத்தி நன்கு உள்ளது. நாட்டில், முட்டை உற்பத்தியில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்கள், முன்னணியில் உள்ளன. நடப்பு பருவத்தில், 5,500 கோடி முட்டைகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், தற்போது வரை, 2,909 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.