ஜனாதிபதி தேர்தல்! - எந்த மாகாணத்தில் யார் அதிக வாக்குகள் பெறுவார்கள்?
வர இருக்கும் ஜனாதிபதி தேர்தல் இரண்டு தலைவர்களுக்கான போட்டியாக மாறியுள்ளது என பிரபல அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். Francois Fillon பல சர்ச்சைகளுக்கு உள்ளாக, அவரது செல்வாக்குகள் கணிசமான அளவு சரிந்துள்ளதாக தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும் கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. தற்போது தேசிய முன்னனி கட்சி வேட்பாளர் Marine Le Pen க்கும், En marche கட்சி சார்பாக போட்டியிடும் Emmanuel Macronக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்டிருந்த புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் மரீன் லூ பென்னே முதல் கட்ட தேர்தலில் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த முக்கிய இரண்டு வேட்பாளர்களும் எந்த எந்த மாகாணங்களில் அதிக வாக்குகள் பெறுவார்கள் என ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த கருத்துக்கணிப்பின் படி, மரீன் லூ பென் Provence-Alpes-Côte d'Azur மாகாணத்தில் 36 வீத வாக்குகளும், Hauts-de-France (34%) மற்றும் Greater East (32%) வீத வாக்குகளும் பெறுவார். இந்த மூன்று மாகாணங்களும் மரீன் லூ பென்னுக்கு சாதகமான மாகாணங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, Emmanuel Macron க்கு Brittany மாகாணம் (24%), Pays de la Loire (22.5%) மற்றும், முக்கியமாக Ile-de-France (21%) வீத வாக்குகளையும் பெற்றுத்தரக்கூடிய மாகாணங்களாக உள்ளது.
Ile-de-France மாகாணம், இரண்டாம் கட்ட தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள Emmanuel Macron க்கே சாதகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Ile-de-France உட்பட மேற்குறிப்பிட்ட அனைத்து மாகாணங்களிலும் தரவரிசையில் Francois Fillon மூன்றாவது இடத்திலேயே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.