தமிழகத்தில் தேர்தல் நடத்தினால் திமுகவுக்கு அமோக வெற்றி - முன்னாள் நீதிபதி கட்ஜூ கணிப்பு
புதுடெல்லி- தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில் தேர்தல் நடத்தினால் திமுக அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதுமே, கட்ஜூ ஒரு கருத்து கூறியிருந்தார். அதில், சிறையில் உள்ளவரிடம்(சசிகலா) இருந்து உத்தரவு பெற்று பழனிச்சாமி செயல்படுவார் என்றும், தமிழகத்தில் இன்னும் 4 ஆண்டுகளுக்கு சிறையில் இருந்து நடத்தப்படும் அரசுதான் என்றும் கிண்டல் அடித்திருந்தார்.
இதன் பின்னர், அவர் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘பழனிச்சாமியை தேர்வு செய்ததன் மூலம் அதிமுக தானாகவே சவக்குழிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. பழனிச்சாமியும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம்.
ஆனால், தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல.
எம்எல்ஏக்கள் கடைசியில் எங்கே போவார்கள்? இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தினால், திமுக அமோக வெற்றி பெறும். அதிமுக படுதோல்வியை சந்திக்கும்’’ என்று விமர்சித்துள்ளார்.
.