சிறு தொழில் முனைவோருக்காக அனைத்து மாநிலங்களிலும் காதி கிராமம்
ஆமதாபாத்: கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம், ஒவ்வொரு மாநிலங்களிலும், தலா, ஐந்து காதி கிராமங்களை துவக்க போவதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டில், குடிசை தொழில், குறுந்தொழில்களை ஊக்குவிக்க, காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும், தலா, ஐந்து காதி கிராமங்களை அமைக்க போவதாக, அந்த ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, ஆணைய அதிகாரி, வி.கே.சக்ஸேனா கூறியதாவது: கிராமங்களில் உள்ள சிறு தொழில் முனைவோரின் பொருளாதார நிலையை மேம்படுத்த, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது, ஒவ்வொரு மாநிலத்திலும், ஐந்து காதி கிராமங்கள் துவக்கப்பட உள்ளன. அங்கு, மெழுகுவர்த்தி, பேக்கரி பொருட்கள் போன்றவற்றை தயாரிப்பது, சந்தைப்படுத்துவது குறித்து பயிற்சியும் அளிக்கப்படும். கடந்த நிதியாண்டில், 1,510 கோடி ரூபாய் மதிப்பிலான, காதி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, நடப்பாண்டில், 2,000 கோடி ரூபாயாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 5,000 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.