இ-சேவை மையம் முடங்கியதால்...ஏமாற்றம்: ஒன்றிய அலுவலகத்தில் அவலம்

தினமலர்  தினமலர்

உடுமலை;உடுமலை, ஒன்றிய அலுவலகத்தில் துவக்கப்பட்டுள்ள இ-சேவை மையம், செயல்படாமல், முடங்கி கிடப்பதால், சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வரும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளில் பயன்பெற, விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து மக்கள் சமர்ப்பித்து வந்தனர். சம்மந்தப்பட்ட அரசு அலுவலகத்தில், விண்ணப்பத்தை அளிக்கும் முன்பு, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் உட்பட அலுவலங்களுக்கு நேரடியாக சென்று, கையெழுத்து பெற வேண்டும். இத்தகைய சிரமங்களை தவிர்க்க, அரசு சார்பில், இ-சேவை மையங்கள் துவக்கப்பட்டன. இம்மையத்தில், ஜாதிச் சான்றிதழ் பெறுவது, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கும், பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்யலாம்.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களில் இந்த மையம் தற்போது செயல்படுகிறது. சமூக நலத்துறையின் கீழ் திருமண உதவித்தொகை மற்றும் பெண்களுக்கான திட்டங்களில் பயன்பெற, விவரங்களை 'ஆன்-லைனில்' பதிவு செய்து, அந்த ரசீதை நலத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மூலமே அவர்களின் பதிவுகள் உறுதி செய்யப்படுகின்றன. உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களுக்கான நலத்துறை ஒன்றிய அலுவலகத்தில் உள்ளது. இத்துறைக்கான விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் தாலுகா அலுவலகத்திலும் செய்யப்படுகிறது.
இதனால், பயனாளிகள் பாதிக்கப்பட்டனர். கிராமப்புற பயனாளிகள் பலரும், தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்து விட்டால் போதும் என நினைத்து, நலத்துறை அலுவலர்களிடம் பதிவு செய்த ரசீதை வழங்குவதில்லை. இதனால், நலத்துறை அலுவலர்களுக்கும் அப்பதிவு குறித்து தெரிவதில்லை. நீண்ட நாட்களுக்கு பின்பு, ஒன்றிய அலுவலகத்தில் வந்து திட்டத்தில் பயன்பெற கேட்கின்றனர். இதனால் அலுவலர்களும் குழப்பமடைகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, ஒன்றிய அலுவலகத்திலும் இ-சேவை மையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது. இதனால், பயனாளிகள் பயன்பெற்றனர்.
திடீரென மூன்று மாதங்களாக இந்த சேவை மையம் செயல்படவில்லை. இதனால், அங்கேயே பதிவு செய்து கொள்ளலாம் என வரும் மக்கள், ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர்.
மக்கள் கூறியதாவதுஒன்றிய அலுவலகத்திலேயே, இ-சேவை மையம் இருந்ததால், வீண் அலைக்கழிப்புகள் இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக, இங்கும் செயல்படவில்லை என்கின்றனர்.தாலுகா அலுவலக சேவை மையத்தில், நாள்தோறும் கூட்ட நெரிசலாக இருப்பதால், இங்கு இ-சேவை மையம் துவக்கியது வசதியாக இருந்தது. தற்போது அதற்கும் வழியின்றி உள்ளது. விரைவில், செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு, கூறினர்.
ஊதியம் கிடைக்கவில்லை
திருப்பூர் மாவட்டம் முழுவதுமே பல இ-சேவை மையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களுக்கு, மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், ஊதியம் வழங்கப்பட்ட பின்பே, மீண்டும் மையம் செயல்பட உள்ளது எனவும் காரணம் கூறப்படுகிறது. சில மையங்களில். பணியாளர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு செய்ய இருப்பதால், தாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை