மாதவனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி..!

தினமலர்  தினமலர்
மாதவனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார் சாய் பல்லவி..!

மலையாளத்தில் கடந்த 2015ல் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று துல்கர் சல்மான் நடித்த 'சார்லி' படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டது. ஒரு மனிதன், எந்நேரமும் உற்சாகமாக, எதையும் பாசிடிவாக எடுத்துக்கொள்பவனாக இருக்க முடியுமா என்கிற ஆச்சர்யத்தை படம் முழுவதும் நிரப்பினார் துல்கர் சல்மான். ஒரு மனிதனின் உண்மையான சந்தோசம் எதில் இருக்கிறது என்பதை துல்கர் கதாபாத்திரம் மூலமாகவும், ஆர்வத்தை தூண்டும் திரைக்கதை மூலமாகவும் விஷுவலான கவிதையாக்கி இருந்தார்கள்.

படத்தில் கதாநாயகியாக நடித்த பார்வதி மட்டும் சளைத்தவரா என்ன..? 'டெஷா' கேரக்டரில் பின்னியிருந்தார் பின்னி. இந்தப்படத்தை ஏ.எல்.விஜய் தமிழில் ரீமேக் பண்ணப்போவதாகவும் அதில் 'சார்லி' கேரக்டரில் மாதவன் தான் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலும் கசிந்து, மாதவனால் மறுக்கப்பட்டு தற்போது அதுதான் உண்மை என ஆகியுள்ளது.. இந்தப்படத்தை அப்படியே ரீமேக் பண்ணாமல் தமிழுக்கு ஏற்றவாறு காட்சிகளை மாற்றிவிட்டாராம் ஏ.எல்.விஜய்.. இப்போது கதையே புது மாதிரி மாறிவிட்டதாம். அதனால் 'சார்லி'யின் ரீமேக் என்று சொல்வதைவிட அதன் தழுவல் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

சரி.. அப்படியானால் பார்வதி கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்கிற கேள்விக்கும் இப்போது விடை தெரிந்துள்ளது.. 'பிரேமம்' மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த சாய்பல்லவி தான் 'டெஷா' கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதற்கு முன் விக்ரமுடன் நடிக்கிறார், மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் என வெளியான வதந்திகளைப்போல அல்லாமல் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ள அக்மார்க் தகவல் என்கிறார்கள். அந்தவகையில் 'பிரேமம்', 'கலி' ஆகிய படங்களை தொடர்ந்து இவர் நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை