ஜல்லிக்கட்டு: நடிகர், நடிகைகள் நாளை உண்ணாவிரதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜல்லிக்கட்டு: நடிகர், நடிகைகள் நாளை உண்ணாவிரதம்

ஜல்லிக்கட்டு தடை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இந்த போராட்டத்துக்கு ஏற்கனவே நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போது திரை துறை அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்கின்றன. தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை (20ம் தேதி) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறது.

இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘5 ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக அது நடக்காமல் தமிழர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காண தமிழர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

மண்ணின் மைந்தர்கள், மாணவர்கள், இளைஞர்கள் தமிழகமெங்கும் போராடி வருகிறார்கள்.

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை (20ம் தேதி) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை நடிகர் சங்க வளாகத்தில் மவுன அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தும்’ என கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ‘‘நமது கலாசாரத்துக்காக மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருப்பதை கண்டு பெருமைப்படுகிறேன்.

அந்த போராட்டத்தில் திரையுலகினர் ஐக்கியமாக வேண்டிய அவசியமில்லை. அது அவர்களின் போராட்டம், அவர்களின் அரங்கம்’’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை