ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் சங்கம் சார்பில் 20 ந்தேதி உண்ணாவிரத போராட்டம்
சென்னை
தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் தடை காரணமாக கடந்த 2 ஆண்டாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு அனுமதி கிடைக்காவிட்டால், தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்தனர்.
பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இது தவிர மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.அலங்காநல்லூரில் மாணவ்ர்கள் - இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று போலீசார் கைது செய்ததையடுத்து, அவர்களை விடுவிக்கக்கோரி அங்கு ஏராளமான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.இதனால் போராட்டம் விசுவரூபம் எடுக்க அலங்காநல்லூரில் போராட்டம் சூடு பிடித்தது.
ஜல்லிக்கட்டை முறையாக நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர்கள் அறிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, சென்னை மெரீனாவிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டம் விடிய விடிய 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.இந்த போராட்டம் வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிவருவதால் மேலும் ஏராளமான இளைஞர்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.
நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுப்பெற மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களோடு, இளைஞர்களும் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர். குறிப்பாக மதுரையிலும் சென்னையிலும் இந்த போராட்டம் தீவிர மடைந்தது வருகிறது.
இந்த் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தென்னிந்திய நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 20 ந்தேதி நடிகர்கள் சங்கம் சார்பில் உண்னாவிரதம் போராட்டம் நடக்கிறது.சென்னையில் நடக்கும் இந்த போராட்டத்தில் அனைத்து நடிகர் நடிகைகளும் பங்கேற்பர்.சென்னையில் நடக்கும் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்போம் என கூறினர்.