ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சல்மான்கான் விடுதலை
ஜோத்பூர் - பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது, அங்குள்ள அபூர்வ வகை மான்களை அவர் வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் கடந்த 2006ம் ஆண்டு சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலையில் சல்மானை விடுதலை செய்து ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மான் வேட்டை தொடர்பாக, அவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி, ராஜஸ்தான் வனத்துறை தனியாக வழக்கு ஒன்றை தொடுத்தது.
இந்த வழக்கில் வாதங்கள் கடந்த 9ம் தேதி நிறைவடைந்தது. இன்று 18ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி தல்பேத் சிங் ராஜ்புரோகித் தெரிவித்திருந்தார்.
சல்மான் கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, இன்று காலை அந்த நீதிமன்றத்தில் சல்மான்கான் ஆஜரானார்.
அவருடன் அவரது சகோதரி அல்விரா கானும் வந்திருந்தார். நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி கேமரா மேன்கள் குவிந்தனர்.
இந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வழக்கில் அரசு தரப்பு போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறி விட்டதாக கூறி சல்மான்கானை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
.