மாணவர்கள் மத்தியில் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு அரசிடம் பேசுவதற்கு குழு...

தினத்தந்தி  தினத்தந்தி
மாணவர்கள் மத்தியில் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு அரசிடம் பேசுவதற்கு குழு...

சென்னை,

மெரீனாவில் போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் மதியம் 12 மணி அளவில் மயிலாப்பூர்  துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒலிபெருக்கியில் பேசினார்.
அப்போது அவர் கூறிய தாவது:-

நான் மதுரையில் 2012-ம் ஆண்டு பணிபுரிந்தபோது அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளேன். எனவே ஜல்லிக்கட்டின் அருமை என்ன என்பது எனக்கு தெரியும். உங்களின் உணர்வு களுக்கு நாங்களும் மதிப்பளிக்கிறோம்.

நேற்று இரவு அமைச்சர்கள் வந்து பேச்சு நடத்திய போது  ஜல்லிக்கட்டு போட்டியை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப் பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நீங்கள் முன் வைக்கிறீர்கள்.

உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதற்கு அரசு தயாராகவே உள்ளது. அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என வலியுறுத்துவதற்கும் தமிழக அரசு தயாராகவே இருக்கிறது.

தமிழக முதல்-அமைச்சர் இன்று ஜல்லிக்கட்டு நடத்துவதை உறுதி செய்யும் வகையில் அறிக்கை தருவதாக தெரிவித்துள்ளார். உங்களது கோரிக்கைகளை அரசிடம் எடுத்துக் கூறினால் அதனை கேட்பதற்கும், அதுதொடர்பாக பேசுவதற்கும்  தயாராகவே இருக்கிறோம். இங்கு பல்லாயிரக்கணக்கில் நீங்கள் திரண்டு இருக்கிறீர்கள். அனைவரிடமும் தனித் தனியாக பேசுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பது உங்களுக்கும் தெரியும். எனவே உங்களது சார்பில் அரசிடம் பேசுவதற்கு ஒரு குழு அமையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை