‘விராட் கோலியுடன் பேட் செய்வது சாதகமான அம்சம்’– ஜாதவ்

தினத்தந்தி  தினத்தந்தி
‘விராட் கோலியுடன் பேட் செய்வது சாதகமான அம்சம்’– ஜாதவ்

புனே,

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 65 பந்துகளில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட இந்திய வீரர் கேதர் ஜாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

‘விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்யும் போதெல்லாமல் அது எதிர்முனை வீரருக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் பந்து வீச்சாளர்கள் அவரை எப்படி கட்டுப்படுத்துவது, அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவது எப்படி என்பதில் தான் குறியாக இருப்பார்கள். எதிர்முனையில் நிற்கும் வீரரை பற்றி அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். அவருடன் பேட் செய்யும் போது, எதிர்முனை பேட்ஸ்மேனுக்கு சில நேரம் ரொம்ப சாதாரணமாக கூட பந்து வீசுவார்கள். அவ்வாறான பந்துகளில் எளிதில் ரன் எடுத்து விட முடியும். அதே போல் அதிகமான நெருக்கடியும் கொடுக்கமாட்டார்கள். இப்படி அவருடன் பேட் செய்யும் போது நிறைய சாதகமான அம்சங்கள் கிடைக்கும்.’

இவ்வாறு ஜாதவ் கூறினார்.

மேலும் ஜாதவ் கூறுகையில், ‘ஒரு நாள் போட்டி அணியில் இனி எனக்கு இடம் உறுதி என்ற மெத்தனத்துடன் இருக்கமாட்டேன். ஒவ்வொரு ஆட்டத்தையும், இது தான் எனது கடைசி ஆட்டம் என்ற அணுகுமுறையுடன் விளையாடுவேன். இந்திய அணிக்கு களம் காண வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 100 சதவீதத்திற்கு மேல் திறமையை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம். எனவே நானும் கிடைக்கும் வாய்ப்பில் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்’ என்றார்.

மூலக்கதை