தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலியாவில் இருந்த பிரத்யங்கரா சிலை மீட்பு
புதுடெல்லி - தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட பிரத்யங்கரா தேவி சிலை மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான பழங்கால சிலைகள், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருந்தன.
அதே போல், பல்வேறு மாநிலங்களில் இருந்து பழங்கால பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருந்தன. வெளிநாடுகளில் விற்கப்பட்ட அவற்றில் சில பொருட்கள், ஆஸ்திரேலியாவில் கான்பெரா நகரில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அவற்றை மீட்கும் நோக்கத்தில், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அங்குள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், அந்த பொருட்களை ஒப்படைக்க ஆஸ்திரேலிய கலைக்கூடம் ஒப்புக்கொண்டது.
அதன்படி, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டிருந்த பிரத்யங்கரா தேவி சிலை, ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட மார்பிள் நடுகல், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இருந்து கடத்தப்பட்ட புத்தர் சிலை ஆகிய 3 பொருட்களும் மீட்கப்பட்டன.
இவை இந்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த பொருட்களை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க கலாசார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஆனால், பிரத்யங்கரா தேவி சிலை, தமிழக போலீசின் சிலை தடுப்பு பிரிவின் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதால், அதை சில நாட்களுக்கு பிறகு தமிழக போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.