மகளை கவுரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி  தினத்தந்தி
மகளை கவுரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை
பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு

லாகூர்,

பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீண் பீபி. இவரது மகள் ஜீனத் (வயது 18) கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினர் அனுமதி இன்றி ஹசன்கான் என்பவருடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் ஜீனத் பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்கு பயந்துபோய் கணவருடன் வசித்துவந்த சமயத்தில், அவரது தாய் பர்வீண் மற்றும் குடும்பத்தினர் பாரம்பரிய முறைப்படி திருமண வரவேற்பு நடத்துவதாக கூறி அழைத்தனர்.

வீட்டுக்கு வந்த ஜீனத்தை அவரது தாய் பர்வீண் மற்றும் சகோதரர் அனீஸ் ஆகியோர் தாக்கினார்கள். ஆத்திரம் அடங்காத பர்வீண் தனது மகள் ஜீனத் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார். இதில் ஜீனத் உடல்கருகி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, மகளை கவுரவ கொலை செய்த பர்வீணுக்கு மரண தண்டனையும், அனீசுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது. அந்நாட்டு பாராளுமன்றம் கவுரவ கொலைக்கான தண்டனையை கடுமையாக்கி புதிய சட்டத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை