காசோலைகளை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

தினமலர்  தினமலர்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் பெண் கல்விக்கான உதவித்தொகை கோடிடப்பட்ட காசோலைகளாக வழங்கப்பட்டதால்,அவற்றை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புறங்களில் பயிலும் மிகவும் பிற்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை பிற்பட்டோர் நலத்துறை மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை 500 ரூபாய், 5 முதல் 8 ம் வகுப்பு வரை ஆயிரம் வழங்கப்படும். கடந்த ஆண்டு வரை உதவித்தொகைக்கான காசோலை கோடிடப்படாமல் (கிராஸ்) தலைமைஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த காசோலையில் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் மேலொப்பம் பெறப்பட்டு, வங்கியில் மாற்றப்பட்டது. இந்த ஆண்டு தலைமைஆசிரியர் சேமிப்பு கணக்கில் செலுத்தி பணமாக்கும் வகையில் காசோலையில் கோடிடப்பட்டுள்ளது.
'தலைமைஆசிரியர்' என்ற பெயரில் எந்த பள்ளியிலும் சேமிப்பு கணக்கு கிடையாது. இதனால் காசோலையை மாற்ற முடியாமல் தலைமைஆசிரியர்கள் தவிக்கின்றனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: தொடக்க, நிடுநிலைப் பள்ளிகளில் 'தலைமைஆசிரியர்' பெயரில் சேமிப்பு கணக்கு இல்லை. இதனால் கோடிடப்பட்ட காசோலைகளை சேமிப்பு கணக்கில் செலுத்தி மாற்றுவதில் சிக்கல் உள்ளது. அவற்றை திரும்ப பெற்று, பழைய முறைப்படி கோடிடப்படாமல் வழங்க வேண்டும், என்றார்.

மூலக்கதை