ஸ்ரீரங்கம் கோயிலில் வேடுபறி: பக்தர்கள் குவிந்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்ரீரங்கம் கோயிலில் வேடுபறி: பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி: சோழப் பேரரசில் தளபதியாக இருந்து பின்னர் சிற்றரசரான திருமங்கைமன்னன் பெருமாளிடம் கொண்ட அளவற்ற பக்தியால் ரங்கம் கோயிலில் மதில்சுவர், கோபுரம் உள்பட பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார். கோயிலில் திருப்பணியை மேற்கொண்டபோது போதுமான நிதியில்லாமல் திருமங்கைமன்னன் கவலையடைந்தார். இதற்காக அவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அதனால் வரும் பொருட்களைக் கொண்டு திருப்பணிகளை செய்து வந்தார். தனது பக்தனாக இருந்தாலும் தவறான வழியில் வரும் பொருட்களைக் கொண்டு திருப்பணிகள் செய்வதை தடுத்து நிறுத்த பெருமாள் மாறுவேடத்தில் வருகிறார்.

இதை அறியாமல் திருமங்கை மன்னன் வழக்கம் போல் வழிப்பறியில் ஈடுபடுவது போல பெருமாளையும் வழிமறித்தார். அப்போது பெருமாள் மன்னனின் செயல்களை தடுப்பதற்காகவும், திருத்துவதற்காகவும் திருமங்கை மன்னன் காதில் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை ஓதினார்.

இந்த மந்திரத்தின் மகிமையால் திருமங்கைமன்னன் திருந்தி பெருமாள் அருளாசியுடன் திருமங்கையாழ்வாராக மாறினார். ஆழ்வாராக மாறியதும் ‘வாடினேன் வாடி. . . ’ என்ற பாடலை பாடினார்.

இதைக் கேட்ட பெருமாள் மகிழ்ச்சி அடைந்தார் என புராணம் கூறுகிறது.
இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து உற்சவ 8ம் நாளில் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி நேற்று மாலை கோயில் வளாகத்தில் உள்ள மணல்வெளியில் நடத்திக் காட்டப்பட்டது. நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மணல் வெளிக்கு வந்தார்.

அங்கு நம்பெருமாள் வையாளி கண்டருளிய பின்னர் வேடுபறி நிகழ்ச்சி நடந்தது. வேடுபறி நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று கோயிலில் குவிந்தனர். பின்னர், நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு சேர்ந்தார்.

அதன்பின் அரையர் சேவைக்கு பின், நம்பெருமாள் இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

.

மூலக்கதை