ஜல்லிக்கட்டுக்காக சிலிக்கன்வேலியில் தமிழர்கள் போராட்டம்: அமெரிக்கர்களும் ஆதரவு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜல்லிக்கட்டுக்காக சிலிக்கன்வேலியில் தமிழர்கள் போராட்டம்: அமெரிக்கர்களும் ஆதரவு

சான் பிரான்சிஸ்கோ: ஜல்லிக்கட்டிற்கு தார்மீக ஆதரவு தெரிவித்து இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் ஜல்லிக்கட்டிற்கு ஆதராவன போராட்டத்திற்கு பொங்கல் நாளன்று சிலிக்கன்வேலியின் பிரிமாண்ட் நகரில் ஏற்பாடு செய்திருந்தது.

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக் கோரி ஒருமித்த கருத்து கொண்ட, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களும் குடும்பத்துடன் பங்கேற்று அமைதியான முறையில் ஆதரவை தெரிவிக்க ஒன்று கூடினர்.

மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள், பெரியோர் என இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதராவான பதாகைகள் பிடித்தும், கோஷங்கள் எழுப்பிய படியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தையும், அது சங்க காலத்திலிருந்து எவ்வாறு தொடரப்பட்டு வருகிறது என்ற வரலாற்றையும், நாட்டு மாட்டினத்தை காக்க ஜல்லிக்கட்டின் அவசியத்தை பற்றியும் அனைவருக்கும் எடுத்துரைக்கபட்டது. போராட்ட பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க மக்களும் ஜல்லிக்கட்டு பற்றி பதாகை மூலமும், நேரிலும் கேட்டறிந்து தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

ஒரு போராட்டம் நடக்கும் போது, அங்கே காரில் செல்பவர்கள் தங்களது காரின் ஹார்ன் ஒலியை எழுப்பி ஆதாரவு கொடுப்பது அமெரிக்க கலாச்சாரம். போராட்டம் நடந்த இடத்தில் தொடர்ந்து ஹார்ன் ஒலி கேட்ட வண்ணம் இருந்தது. குளிர் மற்றும் வீட்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம் அனைத்தையும் தாண்டி பெருமளவில் மக்கள் கலந்து கொண்டது உலகில் தமிழர்கள் எங்கு இருந்தாலும் உணர்வுப்பூர்வமாக தமிழர் மரபு காக்க ஒன்றினைவர் என்பதை பரைசாற்றுகிறது.

கடந்த சென்னை வெள்ளத்தின் போதும் வளைகுடாபகுதி மக்கள் பெருமளவில் வளைகுடா பகுதி தமிழ் மன்றம் மூலம் நிதியுதவி அளித்தனர். அதனை கொண்டு பதினைந்திற்கும் மேலான மிக பெரிய வெள்ள நிவாரண திட்டங்கள் சென்னை மட்டும் கடலூரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை