பிரேசில் நாட்டில் போட்டி கும்பல்கள் இடையே சிறையில் பயங்கர மோதல்; 10 கைதிகள் பலி

தினத்தந்தி  தினத்தந்தி
பிரேசில் நாட்டில் போட்டி கும்பல்கள் இடையே சிறையில் பயங்கர மோதல்; 10 கைதிகள் பலி

பிரேசிலியா

பிரேசில் நாட்டின் சிறை ஒன்றில் போட்டி கும்பல்கள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 10 கைதிகள் கொல்லப்பட்டனர்.

அதிகளவு கைதிகள்

உலக அளவில் அதிகளவு சிறைக்கைதிகளை கொண்ட நாடுகளில், பிரேசில் நாட்டுக்கு 4–வது இடம். இங்கு 6 லட்சத்து 22 ஆயிரம் பேர் சிறைகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பல சிறைகளில் உரிய அளவுக்கு மீறி கைதிகள் திரளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கிரிமினல் கைதிகள் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவதும், இதன் காரணமாக உயிர்ப்பலிகள் நேர்வதும் தொடர்கதை ஆகி வருகிறது. பல சிறைகளில் கிரிமினல் குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

தொடர் மோதல்கள்

புத்தாண்டு தினத்தன்று, மனாஸ் நகரில் உள்ள அனிசியா ஜாபிம் பெனிட்டன்ஷியாரி வளாக சிறையில் நடந்த மோதலில் 56 கைதிகள் கொல்லப்பட்டனர்.

2–ந் தேதி மனாஸ் புராகியூகுவரா சிறையில் நடந்த மோதலில் 4 கைதிகள் உயிரிழந்தனர்.

6–ந் தேதி மாண்டி கிறிஸ்டோவில் அக்ரிகல்சுரல் பெனிடென்ஷியரி சிறையில் நடந்த கலகத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

8–ந் தேதி மனாஸ் டெசம்பர்காடர் ரயாமுண்டோ விடல் பெஸ்சோவா சிறையில் நேரிட்ட கலகத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இப்படி சிறைகளில் அளவு கடந்து கைதிகளை அடைத்து வைத்துள்ளதால் கலகங்கள் மூளுவது வாடிக்கையாகி விட்டதால், அந்த நாட்டில் புதிய சிறைகளை கட்டவும், தேசிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை தீட்டி செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரேசில் அதிபர் மிச்சல் டெமரும், நீதித்துறை மந்திரி அலெக்சாண்ட்ரி டி மொரேசும் சமீபத்தில் அறிவித்தனர்.

மோதலில் 10 பேர் பலி

இந்த நிலையில், அந்த நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நடால் நகரில் உள்ள அல்காகஸ் சிறையில் நேற்று முன்தினம் மதியம், அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 2 கும்பல்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவியது. சிறை வளாகமே போர்க்களம் போல காணப்பட்டது. சிறைக்குள் குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச்சூடு சத்தங்களும் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த மோதலில் 10 கைதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் சிலர் தலை துண்டித்து கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கைதிகள் வசம் சிறை

நேற்று முன்தினம் மதியம் ஆரம்பித்த இந்த மோதலில், சிறைக்குள் போலீஸ் படை செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்ததாகவும், நேற்று காலைதான் போலீசாரால் உள்ளே புக முடிந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. மோதலுக்கு காரணம், சிறைக்குள் போதைப்பொருட்கள் வணிகத்தை யார் நடத்துவது என்பதில் இரண்டு கும்பல்கள் இடையே ஏற்பட்ட போட்டிதான் என்று சொல்லப்படுகிறது.

இந்த சிறை மோதல்கள் குறித்த தகவல், வெளியே காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள், குடும்பத்தினர் தகவல்களை அறிந்துகொள்வதற்காக சிறையின் வெளியே பெருந்திரளாக கூடினர்.

மோதலை தொடர்ந்து சிறையின் கட்டுப்பாடு, கைதிகள் வசம் வந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

மூலக்கதை