தமிழக அரசின் அவசர சட்டத்தை படித்த பிறகே நீதிமன்றத்தை அணுகுவது குறித்து முடிவு : விலங்குகள் நல வாரியம் அமைப்பு தகவல்
புதுடெல்லி: ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவசர சட்டம் இயற்றுவது குறித்து நேற்று முன்தினம் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தற்போது ஜல்லிக்கட்டுக்காக சட்டப்படி அனுமதி வழங்கி அவசர சட்டம் இயற்றப்படுவதால் நீதிமன்றத்தை நாடி எதிர்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என விலங்குகள் நல வாரியம் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றாமல் அறிவிக்கையின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது. இது சட்டப்படி செல்லாது என்பதால் நீதிமன்றத்தை அணுகினோம் என அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை படித்த பிறகே நீதிமன்றத்தை அணுகுவது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் விலங்குகள் நல வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.