அவசர சட்டம் கொண்டு வந்தால் எதிர்ப்போம்!! பீட்டா

PARIS TAMIL  PARIS TAMIL
அவசர சட்டம் கொண்டு வந்தால் எதிர்ப்போம்!! பீட்டா

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் அதை சட்ட ரீதியாக அணுகுவோம் என்று ‘பீட்டா’ அமைப்பு கூறி உள்ளது.

இது தொடர்பாக ‘பீட்டா’ இந்தியா அமைப்பின் செய்தி தொடர்பாளர் மணிலால் வல்லியத்தே நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு வழி அல்ல

எங்களது விழிப்புணர்வு பிரசாரம் அனைத்து விலங்குகளின் நலன்களுக்காகவும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பிட்ட பூர்வீக காளைகள் இனம் அழிந்து வருவதற்கு 1980களில் தமிழக அரசு மேற்கொண்ட வெள்ளை புரட்சியும் (பால் உற்பத்தி பெருக்கம்), கலப்பின காளை விருத்தி திட்டங்களுமே காரணம். அப்போது முதலே பூர்வீக காளைகள் இனம் அழியத் தொடங்கி விட்டது.

காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு மட்டுமே வழி அல்ல. இந்த காளைகளை பாதுகாப்பதற்கு பல்வேறு மனிதாபிமான வழிமுறைகளும் இருக்கின்றன. தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடக்கின்றன. எனவே அனைத்து அரசியல்வாதிகளும் இதுபற்றி முடிவு எடுக்கும் முன்பாக இது தொடர்பாக இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உண்மைகளையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் ஒரு முறை படித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.

காளைகள், தங்களுக்கு துன்புறுத்தல் ஏற்பட்டாலோ, அல்லது சண்டையிட்டாலோ மட்டுமே எதிர்ப்பை காட்டும் குணாதிசயம் கொண்டவை. வலி, பயம், காயம் ஏற்படும்போதுதான் அவை எதிர்ப்பை காட்டத் தயாராகும். ஆனால், ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு கொடுமை நிகழ்த்தப்படுகிறது.

சட்டரீதியாக அணுகுவோம்

தேவையான மற்றும் தேவையற்ற பாதிப்பு என 2 வகை உண்டு. ஜல்லிக்கட்டு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. எனவே அது தேவையற்ற பாதிப்பு என்கிற வகையில் வருகிறது. பாரம்பரியமா? சட்டமா? என்கிற கேள்வி எழும்போது சட்டமே முன்னுரிமை பெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையும் மதிப்பதால் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை சட்ட ரீதியான வழியில் அணுகுவோம். ஜல்லிக்கட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தையும் தொடர்ந்து மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை