குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜவுளி துறையில் ரூ.8,835 கோடி முதலீடு
புதுடில்லி:குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஜவுளி துறையில், 8,835 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.குஜராத்தில், சர்வதேச முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க, ‘வைபரன்ட் குஜராத்’ என்ற பெயரில், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை, அம்மாநில அரசு நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மாநாடு, குஜராத்தில் உள்ள காந்தி நகரில், துவங்கியது. அதில், ஜவுளி துறையில் மட்டும், 8,835 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதுகுறித்து, மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறியதாவது: உலகில், ஜவுளி துறையில், இந்தியாவின் பங்கு அதிகம் உள்ளது. குறிப்பாக, அந்த துறையை ஊக்குவிக்க, குஜராத் அரசு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால், வைபரன்ட் குஜராத் மாநாட்டில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், ஜவுளி பூங்கா, ஜவுளி இயந்திர உற்பத்தி என, ஜவுளி துறையில் மட்டும், 8,835 கோடி ரூபாய் மதிப்புக்கு முதலீடு செய்ய, அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.